Tuesday, July 12, 2011

தமிழ் விஸ்வகர்மா - விளக்கம் 2

           பொதுவாக நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொல் “சொந்தக்காரங்க ..”. இந்த சொந்தக்காரங்க யார்? இவர்களுக்கு நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு நாம் முதலில் விடை காண வேண்டும். இந்த வலைப்பூவைத் தொடங்கி ஏறக் குறைய பல மாதங்கள் ஆகிறது. இந்த பல மாத காலத்தில், ஜாதிப் பெருமையை, பழங்கதைகளை எழுதி எல்லோருடைய நேரத்தையும் வீணடிக்காமல், ஆக்கப் பூர்வமாய் ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதியே இதுவரை பழங்கதைகளை எழுதவில்லை. ஆனால் வருங்கால சந்ததியினருக்கு நம்முடைய சோகக் கதை தெரியாமல் போய்விடும் என்று கருதியே, இப்பதிவை எழுத நேர்ந்தது.

முதலில் விஸ்வகர்மா என்றால் யார் என்று பார்ப்போம்?

ரிக் வேதத்தில் பல இடங்களில் விஸ்கர்மாவைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ரிக் வேதம் 10.81, 10.82 போன்ற ஸ்லோகங்களில் விஸ்வகர்மாப் பற்றிய விஷயங்கள் உள்ளன.

(1) முழு உலகத்தையும் வடிவமைத்த தேவ சிற்பி விஸ்வகர்மா.


(2) உலகத்தின் முழு முதல் தோற்றுவிக்கும் சக்தியாகவும், உலகத் தந்தையாகவும் விளங்குபவர் தனது அனைத்துப் புறங்களிலும் விழிகளையும், வதனங்களையும், புஜங்களையும், பாதங்களையும் உடையவர்.
மஹாபாரதம், ஹரிவம்சம் போன்ற மஹா காவியங்கள் “கலைகளின் தேவன். ஆயிரக்கணக்கான தொழில்நுட்பங்களை விளைவிப்பவர், கடவுளர்களின் சிற்பி, மிகவும் முதல்தரமான, மேம்பட்ட, தலைமையான தொழில் நிபுணர், அணிகலன்களில் புதுமைகளைப் புகுத்துபவர், முடிவும்-அழிவும் அற்ற நிலையான இறைவன்.” என்று விராட் விஸ்வ ரூபத்தைப் புகழ்கின்றன.


(3) தெய்வங்களின் வசிப்பிடங்களையும், அவர்களது வாகனங்களையும், ஆயுதங்களையும், பறக்கும் இரதங்களையும் வடிவமைத்த என்ஜீனியர் ஆவார்.


விஸ்வகர்மாவின் பரம்பரை

விஸ்வகர்மாவின் புதல்வராக ஐவரை, வாயு புராணம் நான்காம் அத்தியாத்தில் கூறப்பட்டுள்ளது.

1) மனு :
விஸ்வகர்மாவின் தலைமகன். அங்கீரஸ் என்ற முனிவரின் மகளாகிய காஞ்சனையை மணந்தவர். மனித குலத்தின் சிருஷ்டிகர்த்தா. பிற்காலத்தில் மனுவின் பெயரினால் அறியப்பட்ட அரசன் நீதிபரிபாலனையில் தன்னிகரில்லாது திகழ்ந்ததனால் நீதிக்கே இலக்கணம் வகுத்து, மனுநீதி சாஸ்திரம் என்னும் பெரும் நூலை சிருஷ்டித்தார். ஆங்கிலச் சொற்கள் Man, Human, Woman போன்றவைகளுக்கு இவரே காரணகர்த்தா என்பது சிந்தனைக்குரியதே ! ஆங்கிலத்தை இங்கிலீஷ் என்று கூறினாலும், பல உலக மொழிகளில் இன்றும் ஆங்கிரஸ் என்றே குறிப்பிடுகிறார்கள்.

2) மயன் :
விஸ்வகர்மாவின் இரண்டாம் மகன் இந்திரஜால சிருஷ்டி கர்த்தா என்று புகழப்படுபவர். பராசர முனிவரின் மகளாகிய சுசனை இவரது மனைவி. பராசர முனிவர் ஜோதிட சாஸ்திரம் எழுதியவர்.
3) த்வஷ்டா:
விஸ்வகர்மாவின் மூன்றாவது மகன். கெளசிக மஹரிஷியின் மகளான ‘ஜெயந்தி’யை மணந்தார்.

4) சில்பி :        
                      ப்ருஹூ முனிவரின் புத்ரி கருணாவை மணந்தவர்.


5) தைவக்ஞர் (அ) விஷ்வக்ஞர் :
ஜெய்மினி முனிவரின் மகளான சந்திரிகா இவரது மனைவி.ஜெய்மினி முனிவர் ஜெய்மினி சூத்திரம் என்ற ஜோதிட சாஸ்திர நூலை எழுதியவர்.


விஸ்வகர்மாவின் கோத்திரங்கள்
 
1) மனுவின் வழித்தோன்றல்கள் 

(இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள்) – சானக ரிஷி கோத்திரம் – ரிக் வேதம்

2) மயன் வழித்தோன்றல்கள் (மர வேலைக் கலைஞர்கள்) – ஸநாதன ரிஷி கோத்திரம் – சாம வேதம்

3) த்வஷ்டா வழித்தோன்றல்கள் – (உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு) – அபுவனஸ ரிஷி கோத்திரம் – யஜூர் வேதம்

4) சில்பி வழித்தோன்றல்கள் (கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு) – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம் – அதர்வ வேதம்

5) விஷ்வக்ஞர் வழித்தோன்றல்கள் – (பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு) – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம் – ப்ரணவ வேதம்


இனி கோத்திரம் என்ன என்று கேட்டால் தைரியமாக சொல்லலாம். பிராமணர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சொல்லித் தருகிறார்கள். பிராமணர்களைப் போன்று நமக்கும் எல்லாம் இருக்கிறது என்று கூறவே இந்த தகவல், பின்பற்றுவது தங்கள் விருப்பம்.


அன்பன்
விஸ்வகரன்

அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க 

5 comments:

விஜய் said...

மிக எளிய நடையில் அழகாக விளக்கியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்

நானும் பல தகவல்களை திரட்டி வைத்துள்ளேன்.

ஒன்று சேர்த்து தருகிறேன்

விஜய்

tamizhviswakarma said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ! திரு. விஜய் அவர்களே! தொடர்ந்து வரவும். தங்கள் மேலான யோசனைகளைத் தரவும்.

மு. கந்தசாமி நாகராஜன் said...

நல்ல தகவல்தான்... இனிமேல் நாமும் உரிமையோடு நமது கோத்திரத்தைச் சொல்லிக் கொள்ளலாம்... ஆனால் சிறு சந்தேகம் உள்ளது...
நமக்கு சில பிராமண நண்பர்கள் உள்ளார்கள். அவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொண்ட விஷயம்தான்...
கோத்திரங்கள் பதினெட்டு என்றும், ஒரு கோத்திரத்தில் பிறந்தவர் அதே கோத்திரத்தில் பிறந்த மற்றவருக்கு சகோதர முறையாகிறார் என்றும் கூறினார்கள். எனவே தனக்கான இணையைத் தேர்ந்தெடுக்கும் போது அதே கோத்திரத்தில் (தந்தை வழி) பிறந்த பெண்ணை மணப்பதில்லை என்பது..
ஆனால் நாம், தச்சர் குடும்பத்தில் பிறந்தவர் தச்சர் குடும்பத்தில்தான் மணம் முடிக்கின்றோம்.. பின்னர் இந்த கோத்திரங்கள் எப்படி பொருந்தும்/?
அடியேனின் சந்தேகம்தான்....

tamizhviswakarma said...

அன்பர் திரு. மு. கந்தசாமி நாகராஜன் அவர்களே! கோத்திரங்களைப் பற்றியும், திருமணம் பற்றிய வகைகளையும், விவரங்களையும் மகாகவி காளிதாசர் தனது “உத்தர காலாமிர்தம்” என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார். அது எல்லா ஜாதியினருக்கும் பொதுவான நூல். மிகவும் நெருக்கமான உறவுகளில் திருமணம் செய்வது மருத்துவ ரீதியாக நல்லதல்ல என்று இன்றைய காலகட்டத்தில் மருத்துவர்கள், அறிவுறுத்துகின்றனர். ஆனால் அன்றைய காலகட்டத்தில் இந்த கோத்திர முறையை கடைபிடித்து, நெருங்கிய உறவு முறையில் திருமணம் செய்வதை தவிர்த்து வந்தனர். கோத்திரங்கள் உருவான காலங்களில், திருமண உறவு முறைகள் பெரும்பாலும் 60-70 கி.மீ சுற்றளவிலேயே நடந்து இருக்கலாம். அந்த காலத்தில் நூறு கி.மீ தொலைவில் சம்பந்தம் செய்து விட்டு அலைவதே பெரிய கஷ்டம் என்பதால் அருகிலேயே பெண் எடுக்கும்போது, நெருங்கிய உறவில் திருமணம் செய்வதை தடுக்கவே இந்த கோத்திர முறைகள் பயன்பட்டது. ஆனால் இப்பொழுது நிலையே வேறு, 500, 1000 கி.மீ தொலைவில் அன்னியத்தில் (ஒரே ஜாதியாக இருப்பினும்) திருமண சம்பந்தம் வைத்துக்கொள்வதால், மருத்துவ ரீதியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்குறைவே. சாஸ்திரங்கள் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டது. அனுஷ்டானங்கள் அவரவர்களின் வசதிக்காக அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டது. கோத்திரங்கள் அனுஷ்டான வகையிலேயே சேரும் என்பதே எமது ஆய்வு. தொடர்ந்து வந்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி !

Anonymous said...

very good information...